ஆகஸ்ட் 11, 2017

பத்து வெள்ளிக்காசு

Image result for Lk: 15:8
பத்து வெள்ளிக்காசு  The Ten Silver Coins                       

திறவுகோல் வசனம்: லூக்கா:15:8 – “அன்றியும் ஒரு ஸ்தீரி பத்து வெள்ளிக் காசை உடையவளாயிருந்து,அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி,வீட்டைப் பெருக்கி,அதை கண்டுபிடிக்கிற வரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?”

இவள் யார்?


ஒரு ஸ்திரீ – ஒரு பெண். சிறுமி அல்ல; புருஷன் / ஸ்திரீ – என்பது போல….  

  அதாவது – பூரண / ஸ்திரமுள்ள / முதிர்ந்த (அறிவில்) ஸ்திரீ. ஆவிக்குரிய வாழ்வில் பொறுப்புள்ளவள். தேவன் தந்தவைகளில் பொறுப்புள்ளவள். இழப்பை சரிசெய்பவள் -  ஈடு கட்டுபவள். எப்படி?

அவளிடம் இருந்தது – 10 வெள்ளிக்காசு  
                                            
 காணாமல் போனது – 1 வெள்ளிக்காசு

காணாமல் போனதை கண்டுபிடிக்க பல வழிகள் உண்டு. ஆனால்… அவள் தெரிந்துகொண்டது 

1.   கொளுத்தப்பட்ட விளக்கு       2. வீட்டைப் பெருக்கும் விளக்குமாறு

அவளது மனவுறுதி: “அதைத் தேடி கண்டுபிடித்தே தீர வேண்டும்” – என்ற ஜாக்கிரதை உணர்வு. ‘போனது ஒன்றுதானே’ என்ற நிர்விசாரம் இல்லை. பத்தில் ஒன்றுகூட குறைய கூடாது.

10 வெள்ளிக்காசு எதற்கு ஒப்பானது?

அக்கால இஸ்ரேலிய வழக்கப்படி,ஒரு யூதப்பெண் – தனது திருமண வாழ்விற்கு சீதனமாக, அவள் கைப்பட சம்பாதித்து,10 வெள்ளிக்காசை சேர்த்து, நூலில் கோர்த்து வைக்கவேண்டும். அதை திருமணத்தன்று நெற்றியில் தெரிய தலையில் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும். அது அப்பெண்ணுடைய ஆவிக்குரிய மற்றும் பூமிக்குரிய பொறுப்புணர்வை எடுத்துக் காட்டும். பத்தில் ஒன்று குறைந்தாலும் அவளது பொறுப்பின்மையை அது வெளிப்படுத்திவிடும்.

10 வெள்ளிக்காசு – ஒவ்வொரு வெள்ளிக் காசும், ஒவ்வொரு ஆவிக்குரிய பொறுப்புள்ள சுபாவங்களை குறிக்கும்                                                               
 விளக்கு - வேதம்  
                                                                      
 வீடு – சரீரமாகிய வீடு (ஆவி,ஆத்துமா,சரீரம்)                                          

 பெருக்கி – தன்னைத் தானே சோதித்தறிதல் – (செப்பனியா:2:2)

பத்து வெள்ளிக்காசில் – ஒவ்வொரு வெள்ளிக்காசுக்கும் ஒவ்வொரு சுபாவம்/ பொறுப்பு உண்டு. அவை என்னென்ன என்பதை விளக்கைக் கொளுத்தி (வேதத்தை திறந்து) பார்த்தால்தான் நாம் கண்டுகொள்ள இயலும்.

    வேதம் காட்டும் இவ்வகையான சுபாவங்கள் நம்மில் காணப்படவேண்டும். அதில் ஒன்றுகூட குறையாத வண்ணம் பாதுகாக்கப்படவேண்டும். ஒருவேளை இந்த தியான நேரத்தில் 10ல் ஏதாகிலும் குறையாகக் கண்டால்… அவை நம்மில் நிறைவேற அர்ப்பணிப்போம்.

    இது ஒரு ஸ்திரீக்கு மட்டுமல்ல. புருஷனுக்கும் உரியது. கிறிஸ்துவுக்குள் ஆண் என்றும் இல்லை; பெண்ணென்றும் இல்லை; இவள் ஒரு கன்னிகை என்றால்… நாமும் மணவாளன் இயேசுவுக்கு ஒரு கன்னிகை தான் – என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பரலோகத்தில் சேர்வதற்கான 10 வகையான நாகரீகம் / பண்பாடு / பின்னனியம் தெரிந்திருக்க வேண்டும்.

பத்து வகையான குணங்கள் / சுபாவங்கள்

1.   ஆதி:20:16 – முகத்தை மூடும் முக்காட்டுக்கு ஒன்று

      பெண்கள் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது தன்னை தாழ்த்துவதற்கு அடையாளமாக தன் முகத்துக்கு முக்காடிட வேண்டும்

1கொரி:11:8-10 – ஸ்திரீ புருஷனிலிருந்து தோன்றினவள்.  

இதை சாராள் மீறினதால் அபிமெலேக்கினால் கடிந்துகொள்ளப்பட்டாள்.

2.   ஆதி:33:19 – அந்நிய நுகத்தில் பிணைக்கப்படாதிருக்க ஒன்று

      யாக்கோபு புறஜாதிகளிடம் நிலம் வாங்கி, அவர்கள் நடுவில் குடியிருந்ததினால், அவன் தன் மகளை இழக்க நேரிட்டது. தன் ஒரே மகள் அந்நியனால் தீட்டுப்படுத்தப்பட்டாள்.

2கொரி:6:14 – அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக.

3.   ஆதி:37:28 – நமக்கு உரியவர்களையும் உரிமைகளையும் விடாதிருக்க ஒன்று

      யோசேப்பை அண்ணன்மார்கள் இஸ்மவேலரிடத்தில் 20 வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டு, தங்கள் தகப்பனிடத்தில் கொடிய மிருகம் கொன்றுப் போட்டதாக கூறினார்கள். தங்களுக்கு உரியவனை அந்நியனிடத்தில் விற்றார்கள்.

நியாயா:1:15 – அக்சாள் திருமணமாகி போகும்போது தன் தகப்பனிடத்தில்,“நீர் எனக்கு வறட்சியான நிலத்தை தந்தீர். இப்போது எனக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்கு தரவேண்டும்” என்று தனக்கு உரியவைகளை கேட்டு பெற்றுக்கொண்டாள். தன் கணவர் மாமனாரிடத்தில் கேட்பது சரியாக இருக்காது; தன் தகப்பனிடத்தில் தானே தன் உரிமைகளை மற்றும் தகப்பன் வீட்டு சீதனங்களை கேட்டுப் பெறுவதே முறையானது என்பதை அறிந்தவள் அக்சாள். அதுதான் சரியானதும் கூட.

4.   நியாயா:16:5 – கணவனின் பலம்/பலவீனம் வெளிப்படுத்தாமலிருக்க ஒன்று

  தெலீலாள் சிம்சோனின் பலத்தை அவனுடைய சத்துருக்களுக்கு வெளிப்படுத்தினாள். தன் சொந்த குடும்பத்தில் உள்ளவர்கள், உடன் பிறந்த தம்பி தங்கை, அண்ணன் அக்காள், அப்பா அம்மா, மற்றும் நட்புகள் என எப்படிப்பட்ட உறவுகளாயிருப்பினும் பகிர்ந்து கொள்வது நல்ல செயல் அல்ல. தன் துணையின் பலத்திற்கு தேவனுக்கு நன்றி சொல்லவும், பலவீனத்திற்காக தேவனிடம் ஜெபிக்கவும் வேண்டும். இது நலம் பயக்கும்.

5.   நியா:17:1-4 – கர்த்தர் தரும் பணத்தை விக்கிரகங்களுக்கு கொடாமலிருக்க ஒன்று.

1இராஜா:15:18,19 – தன்னை காத்துக்கொள்ள எதிரிகளுக்கு கூலி கொடாமலிருக்கஒன்று.

1சாமு:9:8 – “அந்த வேலைக்காரன் பின்னும் சவுலைப் பார்த்து: இதோ என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனுஷன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படிக்கு, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான்.”

  எஜமானிடத்தில் வெள்ளி இல்லை; வேலைக்காரனிடத்தில் சேமிப்பு இருந்தது. சவுல் தனக்காக (தின்பதற்காக) மீதமின்றி செலவழித்தான்; வேலைக்காரன் தேவமனுஷனுக்கு கொடுப்பதற்கென்று மீதம் வைத்திருந்தான்.
                 1இராஜா:7:51 – கர்த்தருக்கு கொடுக்க ஒன்று
தாவீது நேர்ந்து கொடுத்தச் சென்ற வெள்ளியை அவனது குமாரன் சாலமோன் கர்த்தருக்கென்று கொடுத்தான்.

6.   1இராஜா:10:29 – புறஜாதியாரிடம் எதையும் இலவசமாய் வாங்காமலிருக்க ஒன்று

ஆதி:23:9 – ஆபிரகாம் மக்பேலா குகையை 400 சேக்கல் நிறைவெள்ளியைக் கொடுத்து, ஏத்தின் புத்திரரிடத்தில் வாங்கினான்.

யோசு:24:32 – யோசேப்பின் எலும்புகளை அடக்கம் பண்ணுவதற்கு எமோரியரின் கையிலே 100 வெள்ளிக்காசுக்கு வாங்கினார்கள்.

2சாமு:24:24 – அர்வனாவிடம், ”நான் இலவசமாய் வாங்கி,என் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளை செலுத்தாமல்,அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன்” என்று சொல்லி, தாவீது அந்த களத்தையும் மாடுகளையும் 50 சேக்கல் நிறை வெள்ளிக்கு கொண்டான்.

7.   2இராஜா:6:25 – தேவனுடைய கட்டளையை மீறாமலிருக்க ஒன்று

சங்:89:34 – உடன்படிக்கையை மீறக்கூடாது

ஆதி:6:22;7:5,8; - நோவா தனக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.

ஆதி:21:4 – ஆபிரகாம் கட்டளையிட்டபடி விருத்தசேதனம் பண்ணினான்.

யாத்:7:6 – மோசேயும் ஆரோனும் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்.

8.   2சாமு:18:11,12 - தாயின் வளர்ப்பு சரியாய் இருக்க ஒன்று

    யோவாப் அப்சலோமைக் குறித்து அறிவித்த தன் சேவகனிடம்,”நீ அவனை கொன்றுவிட்டு அறிவித்திருந்தாயானால்,10 வெள்ளிக்காசையும் ஒரு கச்சையையும் கொடுத்திருப்பேனே” என்றான். ஆனால் அந்த சேவகனோ,”நீர் 1000 வெள்ளிக்காசுக் கொடுத்தாலும் ராஜாவின் பிள்ளைமேல் என் கையை நீட்டமாட்டேன்” என்றான்.

      ஏனென்றால் அவன் தாய் அவனை ஜெபத்திலும் வேதவாசிப்பிலும் பரிசுத்தத்திலும் நல்மனச்சாட்சியிலும் வளர்த்திருக்கிறாள். அதனால் அவன் ராஜாவின் கட்டளையை மீறாமல் நடந்துக்கொண்டான்.

     எண்:22:18 / 24:12 – பிலேயாம் தவறான வளர்ப்பில் வளர்ந்ததினால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக சாபமிட வந்தான். ஆனால் அது நடக்காததினால், அவர்களை பாவத்தில் நடத்தினால் அவர்கள் தேவனே அவர்களை அழிப்பார் என்று பாலாக்கிடம் யோசனை கூறினான்.

9.   ஓசியா:3:1-3 – கற்புநெறி தவறாதிருக்க ஒன்று

      பின்பு கர்த்தர் என்னை நோக்கி: அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள் என்று சொன்னார்.

“தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீ” – கர்த்தரை விட்டு விலகி சோரம் போன இஸ்ரவேல் வீட்டாரைக் குறிக்கும்.

யாத்:20:3 – “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்”.

ஓசியா: 3:3 – “அவளை நோக்கி: நீ வேசித்தனம் பண்ணாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்”.

இஸ்ரவேல் ஜனங்கள் ஒரே தெய்வமாகிய கர்த்தரைத் தொழுது கொள்கிற கட்டளை பெற்ற ஜனம். அவர்கள் அந்நிய ஜாதியாருடைய மார்க்கங்களையோ, வழிபாடுகளையோ, பழக்கவழக்கங்களையோ பின்பற்றாதிருக்க கர்த்தரோடு உடன்படிக்கை செய்து கொண்டவர்கள். அப்படிப்பட்ட இஸ்ரவேல் ஜனமானது அந்நியமார்க்கங்களை பின்பற்றி அந்நிய தேவர்களை தொழுதுகொண்டு சோரமார்க்கமாய் போனார்கள். ஆவிக்குரிய சோரம் போனார்கள். அவர்கள் மீண்டும் மெய்த்தெய்வத்தினிடம் திரும்பி வந்து அவருக்காக காத்திருக்க வேண்டும். அவரும் அவர்களுக்காக காத்திருப்பேன் என்கிறார்.

ஆவிக்குரிய சோரம் போகாமல் மணவாளன் ஒருவருக்கே கற்புநெறி தவறாது கன்னிகையாக  காத்திருக்க வேண்டும்.  

10.  லூக்:7:41 – கடன்படாதிருக்க ஒன்று

ரோமர்:13:8 – அன்பை தவிர வேறொன்றுக்கும் கடன்படாதிருக்க வேண்டும்

                   மணவாளனுக்கு நியமிக்கப்பட்ட மணவாட்டியிடம் காணப்பட வேண்டிய 10 வெள்ளிக்காசுக்கு ஒப்பான குணங்கள் இவைகளே.

    நாம் ஒன்றைக்கூட தொலைக்காமல் இருந்தால்…, மணவாளனாகிய இயேசு கிறிஸ்து மணவாட்டியாகிய நம்மைப் பார்த்து,“என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை” (உன்னதப்பாட்டு:4:7) என்று சொல்லி, அவரிடம் சேர்த்து கொள்வார்.

வேதத்தின் வெளிச்சத்தில் – விளக்கைக் கொளுத்தி – கூட்டிப் பெருக்கி - காணாமல்போன சுபாவங்களை கண்டுபிடியுங்கள். மணவாளன் இயேசு வருகையில் அது வெளியரங்கமாய் காணப்படட்டும். உன்.பாட்: 4:16 – “… என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக”.

      கறைதிரை முதலானவைகள் ஒன்றும்இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக் கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். (எபேசியர்: 5:27)

மணவாளனாகிய இயேசுகிறிஸ்து சபையாகிய மணவாட்டிக்கு ஒப்புக்கொடுத்து விட்டார். மணவாட்டியே மணவாளனாகிய இயேசுவுக்கு உன்னை ஒப்புக்கொடுத்து விட்டாயா?