மார்ச் 27, 2013

நிக்கொலாய் மதஸ்தர்

.

 வெளி 2:6, 15 என்னும் இரண்டே வசனங்களில் மட்டும் இந்த கூட்டத்தாரைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. எபேசு, பெர்கமு என்னும் சபைகளுக்கு சொல்லப்பட்ட செய்தியில் நிக்கொலாய் மதஸ்தர் பற்றி வாசிக்கிறோம். யோவான் எழுதிய காலத்தில் இருந்தவர்களுக்கு யார் இவர்கள் என்று நிச்சயமாக தெரியும் என்ற காரணத்தினால் அவர்கள் எந்த ஊரில் இருந்தனர் என்று யோவான் சொல்லவில்லை.

அவர்கள் யார்? அவர்களுடைய பழக்கங்கள் என்ன? ஏன் தேவன் அவர்களை வெறுத்தார்?
அப்போஸ்தலர்களின் காலத்தில் அன்றாட விசாரணை செய்ய எழுபது (70) பேரை சீஷர்கள் நியமித்தனர். இவர்களில் ஒருவன் நிக்கொலா (அப் 6:5) இரத்த சாட்சியாய் மரித்த ஸ்தேவானும் இந்த எழுபது பேர்களில் ஒருவன். ஆனால் இந்த வசனத்தில் நற்சாட்சி பெற்ற ஆட்களில் ஒருவன்தான் இந்த நிக்கொலா என்பதால் நமக்கு இவரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் எத்தனையோ வைராக்கியமான போதகர்கள் பின்மாற்றம் அடைந்து போனதையும் காண்கிறோம். இந்த பெயரை இவர் கொண்டிருந்ததால் சிலர் இவர்தான் என்று குழப்பும்படி சொல்கின்றனர். இவர் ஸ்தேவானைப்போல பரிசுத்த ஆவியினால்லும் ஞானத்தினாலும் நிறைந்தவர் என்பதால் இவர் என்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அப் 2:6ல் சொல்லப்பட்ட நிக்கொலா என்பவர் இந்த இயக்கத்திற்கு எந்த தொடர்பு அற்றவராக இருப்பினும், நிக்கொலா என்ற பெயரை உடைய யாரோ தலைமை வகித்திருந்தார்கள் என்பதில் ஐயம் இல்லை. Nicolaitan என்பதில் Nikan + laos : இதற்கு conquer (வெற்றிபெறு) மற்றும் people (ஜனங்கள்) என்று பொருள் என்று கிரேக்க சொல்-வரலாற்றில் (etymology) காணலாம் என்பதாக வேதாகமக ஆராய்ச்சி வட்டங்களில் சொல்லப்படுகிறது; இதில் இந்த இயக்கம் பேராயர்களுக்கு (clergy) சாதகமாக மற்றவர்களை அமுக்கி/மட்டம் தட்டி வைத்ததாகவும் விவாதம் உள்ளது. இப்படியான செய்தியை நவீன ஆயர்கள் சொல்கின்றனர்; முதலாம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட ஒரு செய்தி-தகவல் இல்லை. மேலும் சொல்-வரலாற்றை வைத்து வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடிப்பதிலும் ஆபத்துகள் உள்ளன. பைபிளில் (வெளிப்படுத்தலில்) இப்படிப்பட்ட செயலை வலியுறுத்தி வேறு வசனங்களும் இல்லை.

பைபிளில் ஒரு ஆதாரம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிக்கொலாய் மதஸ்தர் என்பவர்கள் பற்றி சொல்லுவதற்கு முன்பு பிலேயாம் என்பவனின் போதகத்தை பின்பற்றியவர்கள் பற்றி சொல்லி பின்பு "அப்படியே நிக்கொலாய் என்னும் கூட்டத்தாரை" (வெளி 2:14-15) என்பதில் ஒரு தொடர்பைக் காணலாம். யூதர்களில் ரபீ என்பவர்கள் சொல்வதுபோல்
நிக்கொலா என்ற வார்த்தையானது பிலேயாம் என்பதின் கிரேக்க வார்த்தை என்பதற்கான சாத்தியம். (எப்படி மல்லிகா, Jasmine இரண்டும் வேறு பெயராயிருப்பினும் அர்த்தம் ஒன்றுபோல) இது முதலாம் நூற்றாண்டின் காலத்துக்கும் இந்த வசனத்துக்கும் பொருந்துகிறது என்பது ஒருபார்வை. எனவே இக்கூட்டத்தாருக்கும் பிலேயாமைப்பற்றி சொல்லப்பட்ட வசனத்துக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது.

யோவான் வெளி 2 ல் பிலேயாம் என்பவரை இரண்டு பிரச்சனைக்குரியவராக காட்டுகிறார்.

1 - விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிப்பது.
2 - வேசித்தனம்.

ஆதி சபைகளுக்கு பெரிய பிரச்சனையானது இந்த அந்நியதேவர்களின் வழிபாட்டுடன் சற்றே அநுசரித்து போன ஜனங்களாகும். அப் 15:20, 29 மற்றும் 1 கொரி 8--10 ஆகியவற்றில் பவுல் இதைப்பற்றி குறிப்பிடுகிறார். பவுல் மற்றும் யோவான் ஆகிய இருவரும் விக்கிரகங்களுக்கு படைத்தவைகள் குறித்து சொல்கின்றனர். பவுல் கடையில் விற்பதை வாங்கி புசிக்கலாம் ஆனால் விக்கிரககோவில்களுக்குள் செல்லாதே என்கிறார்.
பாலியல் பிரச்சனை என்பது சற்றே கடினமான ஒன்று. இதை வெளி 2:20,22-லும் யேசெபேல் என்பவளை குறித்து சொல்லப்பட்டுள்ளது . பழைய ஏற்பாட்டிலும் இந்த பெயரைக் காணலாம் (ஆகாபின் மனைவி). ஆனால் வெளி 2:20 ல் சொல்லப்பட்டுள்ள யேசெபேல் அவள் அல்ல, இங்கே சொல்லப்பட்டவள் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்டாள். இரண்டாவதாக அவள் தேவ ஊழியர்களை வேசித்தனம் செய்யவும், விக்கிரகங்களுக்கு படைத்ததை புசிக்கவும் செய்தாள் என்று பார்க்கிறோம். மனந்திரும்ப தேவன் தவணை கொடுத்தார் அவளோ திரும்பவில்லை. இதை 1 கொரி 5:1; 6:12-20 மற்றும் எபி 13:4 ல் பவுலும் சுட்டிக்காட்டுகிறார்.

பழைய ஏற்பாட்டில் யேசெபேல் ஆகாபுக்கு பாலியல் துரோகம் செய்யவில்லை, மாறாக இஸ்ரவேல் ஜனங்களை பாகலை வணங்கும்படி செய்தாள்.
பழைய ஏற்பாட்டில் தேவனைவிட்டு வேறு தேவர்களை பின்பற்றுவதை தேவன் வேசித்தனம் என்று சொல்கிறார். (என் ஜனம் சோரம் போயிற்று).

பேயோரின் ( Peor) கூட்டத்தாரிடத்தில் (பிலேயாம் - எண்: 25:1-18) காணப்பட்ட பாவம் என்னவெனில் மோவாபியர் (மீதியானியர்) பெண்கள் இஸ்ரவேல் ஜனங்களை அந்நிய தேவர்களை வணங்கும்படியும், அவைகளுக்கு படைத்ததை புசிக்கும் படியும் செய்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் வேசித்தனம் செய்தனர்.

இவைகளை பார்க்கும்போது, நிக்கொலா என்னும் கூட்டத்தார் தேவனுடைய ஜனங்களை அன்று காணப்பட்ட கலாச்சாரத்துடன் பிணைக்கும்படி, கொஞ்சம் கலாச்சாரத்துடன் அநுசரித்து போகலாம் (compromise) என்று புகுத்திய கூட்டத்தாராக காணமுடிகிறது. வேறு விதத்தில் சொல்லப்போனால், தேவன் ஒருவரை வணங்குவதை விட்டுவிட்டு, மற்ற சடங்கு சம்பிரதாயங்களில் பங்கு கொண்டால் தவறல்ல என்றும், தேசிய சங்கங்கள் மற்றும் அவர்களின் வழிபாடுகளுடன் சற்றே ஒத்துபோகலாம் என்றும் போதித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட போதனைகளில் வேசித்தனமும் அடங்கியிருந்தது. இதை யோவானிடம் இயேசு சொல்லும்போது அந்த சபையின் மேல் பிரியப்படாமல் அதின்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக்குறித்து சொல்லுகிறார்.

இன்றும் உலகில் சபைக்கு சபை வேறுபாடுகள் காணப்படுகின்றன.
எனவேதான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒரு விக்கிரகமான காரியம் உண்டு.

இன்றும் நிக்கொலாய் கூட்டத்தார் வேறு பெயர்களில் வாழ்கின்றனர். இவர்கள் வேதபுரட்டர்களாயிருந்து, இது செய்தால் தவறல்ல, சரிதான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட புரட்டல்களை இயேசு ஒத்துக்கொள்ளமாட்டார். அவைகள் நியாயத்தீர்ப்பினை அடையும்.

நன்றி:  http://tamilbibleqanda.blogspot.com

மார்ச் 18, 2013

மத்தேயு சுவிசேஷம்




ஆசிரியர்:    மத்தேயு

மத்தேயு வரி வசூலிக்கும் பிரிவைச் சார்ந்தவன்.
12 அப்போஸ்தலரில் ஒருவன் - மத்தேயு: 9:9-13.
நல்ல எழுத்தாளன் - மத்தேயு: 10:3

மத்தேயு இதை எழுதினான் என்று கி.பி.365 ல் வாழ்ந்த எசுபியஸ்; கி.பி. 100 ல் வாழ்ந்த பாப்பியஸ் மற்றும் 2 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐரேனியு போன்ற சபை பிதாக்கள் கூறுகின்றனர். இது முதலாவது அரமேயு பாஷையில் எழுதப்பட்டு பின்னர் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.

எழுதப்பட்ட காலமும் இடமும்:

கிறிஸ்தவர்களின் முதலாம் சிதறடிப்புக்கு முன்பு (அப்: 8:4) இது எழுதப்பட்டிருக்க முடியாது. கி.பி. 70 ல் எருசலேம் அழிக்கப்பட்ட பின்பும் இது எழுதப்பட்டிருக்க முடியாது. ஏனென்றால், எருசலேமின் அழிவு பற்றி (மத்: 24:1-28) தீர்க்கதரிசனம் இதில் இருக்கிறது. 

எனவே, கி.பி.70 க்கும் இடையில் கி.பி.68 ல் இது எழுதப்பட்டிருக்க வேண்டும். அந்தியோகியாவில் வைத்து இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.

யாருக்கு எழுதப்பட்டது?:

 யூத மார்க்கத்தோடு இணைந்த ஒரு சபைக்கு எழுதப்பட்டது. முக்கியமாக சீரிய யூத சபைக்கு எழுதப்பட்டது எனலாம்.

எழுதப்பட்டதின் நோக்கம்:

நசரேயனாகிய இயேசு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா மற்றும் இஸ்ரவேலின் ராஜா என்பதை நிரூபிக்க இது எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் சுமார் 60 இதில் உள்ளது.

கருப்பொருள்: 

மேசியாவாக, இஸ்ரவேலின் இராஜாவாக வந்த இயேசுவின் முதல் வருகையும் அவர் நிராகரிக்கப்படுதலும்.

திறவுகோல் வசனம்:

மத்தேயு: 1:1 - தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு.
மத்தேயு: 23:37-39 - இயேசு கிறிஸ்து ஆபிரகாம் வம்சத்தில் வந்தார்.
"எருசலேமே! கோழி தன் குஞ்சுகளை சேர்த்துக் கொள்வதுபோல் உன்னை சேர்த்துக் கொள்ள நினைத்தேன்."

திறவுகோல் வார்த்தை:

நிறைவேறிற்று -  17 முறை வருகிறது.

தேவனுடைய இராஜ்யம் -  32 முறை வருகிறது.

பரலோக ராஜ்யம் - என்பது மத்தேயுவில் மட்டும் விசேஷித்தவிதமாக வருகிறது. ஏனெனில், யூதர் தேவனுடைய ராஜ்யம் பூமியில் அமைக்கப்படும் என்று எதிர்பார்த்தனர். அதாவது பரலோகம் பூமியில் இறங்கி வந்து ஆட்சி செய்யும் என்பது யூதரின் எதிர்பார்ப்பாகும்.

ஆனால், மேசியாவை புறக்கணித்தபோது தேவனுடைய இராஜ்யம் பின்னால் வரக்கூடிய ஒன்று என நினைத்தனர். அது தற்போது இயேசுவை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவர் இதயத்திலும் இரகசியமாக உள்ளே இருக்கிறது என்ற கருத்து சொல்லப்பட்டது.

மார்ச் 01, 2013

இஸ்ரேல் பயணத்திற்கு - அரசு நிதி உதவி

 
தமிழக நிதியுதவி திட்டத்தின் கீழ் இஸ்ரேல் புனித பயணம் சென்று வர தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பெருமக்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.20,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இதற்கான பயண முகவர்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண முகவர்களின் பயண நிரல்படி எகிப்து, இஸ்ரேல், ஜோர்டான் நாடுகளை உள்ளடக்கிய 10 நாள் எருசலேம் புனித பயணத்திற்கு ரூ. 73,000 மற்றும் இஸ்ரேல், ஜோர்டான் நாடுகளை உள்ளடக்கிய 7 அல்லது 8 நாட்கள் ஜெருசலேம் புனித பயணத்திற்கு ரூ. 66,000 பயணத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு நிதியுதவி ரூ. 20 ஆயிரத்தை பயண முகவர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் நேரடியாக செலுத்தப்பட உள்ளதால் பயனாளிகள் மீதத் தொகையான ரூ. 53,000 (10 நாட்கள்)  அல்லது ரூ.46,000 (7 அல்லது 8 நாட்கள்) மட்டும் பயண முகவர்களுக்கு செலுத்தினால் போதுமானது.

அரசு திட்டத்தின் கீழ் புனித பயணம் மேற்கொள்ள விருப்பம் இருந்து இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு மேலும் வாய்ப்பு அளிக்கும் விதமாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் மேலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும்.

எனவே, எருசலேம் புனித பயணம் மேற் கொள்ள விருப்பமுள்ள கிறிஸ்தவ பெருமக்கள் மேலும் தாமதமின்றி அதற்கான விண்ணப்பத்தினை,

மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்,
807, (5 வது தளம்),
அண்ணா சாலை,
சென்னை - 600 002

என்ற முகவரிக்கு  "ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்"  என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிறிபடுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மற்றும் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் ஆகிய இடங்களில் விண்ணப்பம் கிடைக்கும்.

www.tn.gov.in/bcmbcmw/welf-schemes_minorities - என்ற இணைய தளத்திலிருந்தும் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது.