செப்டம்பர் 05, 2012

"கும்ரான் இனத்தவர்கள்"


"எசனீயர்"
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பாலஸ்தீனாவில் பரிசேய, சதுசேயர்களைப்போல "எஸ்சென்ஸ்" (Essenes) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வகுப்பினர் என ஜொசிப்பஸ் கூறுகிறார். 1947 ல் சவக்கடல் அருகில் 'கும்ரான்' என்னுமிடத்தில் (எரிகோவிலிருந்து தெற்கே 8 1/2 மைல்) புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அநேக சுருள்களையும், கட்டிடங்களின் பகுதிகளையும் கண்டு பிடித்தனர். இது ஒரு பாலைவனப்பகுதி.

இப்பகுதியில் மக்கள் கி.மு.100 முதல் கி.பி.100 வரை வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இப்பகுதி மக்களைத்தான் "கும்ரான் மக்கள்" என்றும், "சவக்கடல் கும்ரான் சுருள்கள் இனம்" (Dead Sea Scrool Community) என்றும் அழைக்கப்பட்டனர். பழைய ஏற்பாட்டு புத்தகங்களிலுள்ள அநேக சுருள்கள் இதில் இருந்தது. இச்சுருள்களுக்கு ஆங்கிலத்தில் "IQIs" எனப்படும்.

'அந்தியோகஸ் எபிபனேஸ் IV' (Antiochus Epiphenes IV) என்ற இராஜா மிகவும் கொடுமையானவன். யூதர்களை துன்பப்படுத்தினான். 'ஹசிடியர்கள்' மிகவும் பக்தியுள்ளவர்கள். இவர்களுக்கு இம் மன்னன் உபத்திரவம் தந்ததினால் சுருள்களை எடுத்தக் கொண்டு சவக்கடலின் அருகே உள்ள 'கும்ரான்' என்னுமிடத்தில் தங்கியதாக பாரம்பரியம் உண்டு.


இந்த ஹசிடியர்கள் பக்திக்குரிய யூதர்கள். மக்கபேயர் புரட்சியில் மக்கபேயருக்கு உதவி செய்தார்கள். ஹசிடியர்கள் மக்கபேயருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பின்பு இந்த மக்கபேயர்கள் பக்தியில் குறைந்துபோய், போரில் மட்டும் முக்கிய கவனம் செலுத்தினர். எனவே, ஹசிடியர்கள் தங்களுடைய ஆதரவிலிருந்து விலகிக் கொண்டனர். எனவே, உபத்திரவம் அதிகரித்தது. எனவே, இவர்கள் யூதேயாவின் வனாந்திரத்தில் சவக்கடல் அருகே உள்ள குகைகளில் தங்கினர்.

தோற்றம்: 

 யூத மதத்தில் பரிசேயர், சதுசேயர், எசனேயர், செலோத்தியர் என்ற நான்கு மெய் விளக்கியல் கிளைகள் உண்டு என்று ஜொசிப்பஸ் கூறுகிறார். எசனேயர் என்ற சொல் 'காசியாச்' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என 'பைலோ' (Philo) என்பவர் கருதினார். 'காசியாச்' என்ற சொல் 'புனிதன்' அல்லது 'பக்தன்' என்று பொருள். 

பரிசேயர் ஆவிக்குரிய வாழ்வை கடைபிடிக்காதவர்களை விட்டு தங்களை வேறுபடுத்திக் கொண்டார்கள். எசனேயர், சமயநெறியை சரிவரக் கைக்கொள்ளும்படி மக்கள் சமூகத்தை விட்டு பிரிந்து வாழ்ந்தவர்கள். முக்கியமாக பிற்காலத்தில் எழுந்த 'பிதாகோரியர்' ( Pythagoreans) என்ற மெய்விளக்கியல் வகுப்பார் மூலம் 'எசனேய வகுப்பு' உருவாயிற்று. யோனத்தான் ஆட்சியின்போது கி.மு.161 - 148, அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர் ஜொசிப்பஸ் கூறுகிறார்.

மக்கபேயர் கலகத்திற்குப் பின்னால் எழுந்த அதிகாரப் போட்டியில் சீமோன் ஆசாரியனாகவும், ஆளுநராகவும் அதிகாரத்தைக் கைப்பற்றவே, பரிசேயர், சதுசேயர், எசனேயர் ஆகிய இம் மூன்று வகுப்பினர் தோன்றினர் என்று W.R.ஃபார்மர் (W.R.Farmer) என்ற வேத பண்டிதர் கூறுகிறார்.

 எசனேயரின் குணநலன்கள்:

இவர்கள் இல்லற வாழ்வைத் துறந்தவர்கள். அவர்களுடைய சொத்துக்களையும் பொதுவாய் வைத்து அனுபவித்தபடியால் அவர்கள் நடுவே, ஏழை பணக்காரன் என்ற எண்ணம் இல்லை. இவர்கள் குளித்தபின்தான் உணவு உண்பார்கள். வேலை செய்யாத நேரத்தில் வெண்ணங்கி தரித்திருப்பார்கள். கோபப்பட மாட்டார்கள். சுபாவத்தில் அமைதியாய் இருப்பவர்கள். ஆணையிட மாட்டர்கள். ஓய்வு நாளை ஆசரித்தார்கள். சொந்த சரீரம், வாழும் இடம், துணிகளை சுத்தமாக வைத்திருந்தார்கள். இவர்களுடைய சட்டங்களுக்கு கீழ்படியாதவர்களை சமுதாயத்தை விட்டு தள்ளப்பட்டார்கள். இவர்கள் வேதவசனத்தில் உள்ளபடி கிலவுதிராயன் காலத்தில் யூதர்கள் ரோமாபுரியை விட்டு துரத்தப்பட்டனர். எனவே, யூதர்கள் ரோமாபுரிக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள்.

கும்ரான் இனத்தவர்கள் தேவாலயம் தீட்டுப்பட்டபடியினால் தங்களுடைய பக்தியை கருதி, தங்களுடன் சுருள்களை எடுத்தக் கொண்டு ஓடினார்கள். இந்த சவக்கடல் சுருள்கள் புதிய ஏற்பாடு எழுத மிக முக்கியமானதாக அமைந்தது. இந்த 'எசன்ஸ்' ஏசாயா: 40:3 - ன் படி விலகிக் கொண்டார்கள். தேவாலயமும் சீர்கெட்டுப் போயிற்று. ஆகவே, பாலைவனத்திற்கு ஓடி விட்டனர்.

இந்தக் கும்ரான் இனத்தவர்கள் இயேசு வாழ்ந்த காலத்திலும், ரோமர் எருசலேமை தாக்குகிற காலத்திலும் கி.பி.66 முதல் கி.பி.70 வரை இந்த இனம் மிகவும் செயல் திறன் உடையவர்களாகக் காணப்பட்டனர். இவர்களுடைய தலைவர் "நீதியின் போதகர்" என அழைக்கப்பட்டார்.

மேலும் இந்த இனமானது உயர் மட்ட அதிகாரமான இனம். 3 ஆசாரியர்களையும், 12 மற்ற மக்களையும் கொண்ட ஒரு குழுவாக இயங்கியது. ஆசாரியர்களும், லேவியர்களும், மூப்பர்களும் உயர்மட்ட அதிகாரிகளாக இருந்தனர். முக்கியமான தீர்மானங்கள் 'சீட்டு எடுத்தல்' மூலம் முடிவெடுக்கப்பட்டது. நியாயப்பிரமாணம் கடைபிடிக்காதவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது.

யோவான்ஸ்நானகனுக்கும் இந்த கும்ரான் இனத்தவருக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என எண்ணுகின்றனர். காரணம்? இவனுடைய நடை, உடை, பாவனையைக் கொண்டு அவனது தொடர்பைச் சொல்கின்றனர். மேலும் கும்ரான் இனத்தவர்களைப்போல இவனும் வனாந்திர வாசி.

கும்ரான் இனத்தவர்களாகிய எசனீயர் எருசலேமில் இருந்ததற்கான அறிகுறியாக பட்டணத்தின் தென் வாசல் "எசனீயர் வாசல்" என்று அறியப்படுகிறது.

இந்தக் கும்ரான் இனத்தவருக்கும், ஆரம்ப கால சபைக்கும், "தாங்கள் கடைசிக் காலத்தில் வந்திருக்கிறோம்" என்ற உணர்வு அவர்களுக்கு இருந்தது. கும்ரான் இனத்தவர்கள் ஒரு புதிய காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அக் காலத்தில் இரண்டாவது மோசே வருவாரென்றும், சாதோக் வழிவரும் ஒரு ஆசாரியன் வர வேண்டும் என்றும், தாவீது வழிவரும் ஒரு மேசியா வர வேண்டும் என்றும் எதிர்பார்த்தனர்.

எசனேயர் மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தினர். தாங்களே புதிய உடன்படிக்கையின் மக்கள் என்று நம்பினர். சொத்துக்களைப் பொதுவாக வைத்து அனுபவித்தனர். இவர்கள் எருசலேம் தேவாலயத்திற்கு காணிக்கை அனுப்பி வந்தனர். அன்றாட வழிபாடு, வேத ஆராய்ச்சி யாவும் நடந்து வந்தன. இந்தக் கும்ரான் இனத்தவர்கள் தங்களை "ஒளியின் புத்திரர்கள்" என்றும்; மற்றவர்களை "இருளின் புத்திரர்கள்" என்றும் வர்ணித்தனர்.