ஆகஸ்ட் 31, 2012

யூதர்களின் வரலாறு

                                                                                  யூதர்களின் வரலாறு
                                                                                         ( History of Jewish)

முதல் யூதன் ஆபிரகாம். கிறிஸ்துவுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், தற்கால ஈராக்கில் உள்ள 'ஊர்' என்ற இடத்தில் பிறந்தவன். தேவன் ஆபிரகாமை வேறொரு நாட்டிற்குப் போகச் சொன்னார்.(ஆதியாகமம்: 12:1). அந்த நாட்டை ஆபிரகாமின் சந்ததிக்குச் சொந்தமாகக் கொடுக்க வாக்களித்தார். அதுதான் இஸ்ரேல் நாடு. தேவன் ஆபிரகாமுக்கு, 'நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்' என்று ஒரு வாக்குக் கொடுத்தார். (ஆதியாகமம்: 12:2).  அதன் மூலம் உலகம் அனைத்தையும் ஆசீர்வதிக்கப்போவதாகவும் சொன்னார். அந்த நாடுதான் யூத நாடு.

தேவன் ஆபிரகாமோடும் அவன் சந்ததியாரோடும் ஓர் உடன்படிக்கை செய்தார். "தேவன் ஆபிகாமை நோக்கி: உனக்கும் உனக்குப் பின்வரும் சந்ததிக்கும் நான் தேவனாய் இருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன் என்றார்". (ஆதியாகமம்: 17:7,8).

இப்படியாக தேவன் யூதரைத் தமது விசேஷித்த ஜனமாகத் தெரிந்து கொண்டார். (யாத்திராகமம்: 19:5,6). சரீரத்தின்படி ஆபிரகாமின் வழி வந்தவர்கள் யூதர்கள். இதில் அவர்கள் மிகவும் பெருமை கொண்டனர். ஆனால், தேவன் யூதர்கள் தமக்குக் கீழ்ப்படியவும், தம் ஒருவரை மாத்திரமே தொழுது கொள்ளவும் கட்டளையிட்டார். அதுவே உடன்படிக்கையில் அவர்கள் செய்ய வேண்டிய பங்கு.

பழைய ஏற்பாட்டுக் காலங்களில் ஒன்றான மெய்த்தேவனை வணங்கிய ஒரே இனம் யூத இனம்தான். ஆனால், அவர்கள் பலமுறை தவறினர். தேவனுக்குக் கீழ்படியாமல் போயினர். அவர்கள் தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பும்படியாக, அவற்றுக்காக மனஸ்தாப்படும்படியாகக் கூற தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பினார்.

 யூதர்களை, உலகின் எல்லா ஜாதி ஜனங்களுக்கும் ஓர் ஆசீர்வாதமாய் வைக்கும்படியாக தேவன் தெரிந்து கொண்டார். (ஆதியாகமம்: 12:3). யூதர்களிடமிருந்து வந்த ஆசீர்வாதங்களில் தலைசிறந்தது பாழ் உலகை மீட்க வந்த இரட்சகர் இயேசு கிறிஸ்துவே. இவர் ஆபிரகாமின் வம்சத்தில் உதித்தவர். ஆபிரகாமின் வழி வந்த யூதர். (மத்தேயு: 1:1).

இயேசு கிறிஸ்துவின் மூலமாக , தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்திருந்த வாக்குத்தத்தம் நிறைவேறியது. ஆபிரகாம் விசுவாசத்தில் வல்லவன்.(கலாத்தியர்: 3:6; எபிரேயர்: 11:8-12). சரீரத்தின்படி ஆபிரகாமின் வழி வந்தவர்கள் யூதர்கள் என்றாலும், கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் அனைவருமே விசுவாசத்தின் மூலமாக ஆபிரகாமின் மெய்யான ஆவிக்குரிய சந்ததியாவார்கள். (கலாத்தியர்: 3:7-9).

யூதமார்க்கத்தில் அமைந்தவர்கள்:

வேதத்தில், யூதர்கள் அல்லாத அனைவரும் புறஜாதிகள் என்றே அழைக்கப்பட்டனர். யூதர்கள் புறஜாதிகளை அற்பமாய் எண்ணினர். ஏனென்றால், வேதாகமக் காலங்களில் பெரும்பாலான புறஜாதிகளுக்கு ஒன்றான மெய்த் தெய்வத்தை அறிந்திருக்கவில்லை. அவர்கள் போலிக் கடவுள்களை நம்பினர். வழிபட்டனர். எனவே, யூதர்கள் புறஜாதிகளைத் தீட்டானவர்கள் எனக் கருதினர்.

  பிறப்பால் யூதர்களாக பிறக்காவிடினும் சில கிரியைகளை கைக்கொள்வதினிமித்தம் மற்ற ஜாதியினர் (புறஜாதிகள் - Gentile) யூதர்களாக மாறலாம். நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதினாலும், விருத்தசேதனம் பண்ணிக் கொள்வதனாலும் யூதர்களாக மாறலாம். இப்படியாக யூத மதத்திற்கு மாறிய புறஜாதிகள் "யூதமார்க்கத்தில் அமைந்தவர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.

இயேசு கிறிஸ்து யூதர்களை மட்டுமல்ல, புறஜாதிகளையும் கூட - முழு உலகத்தையுமே இரட்சிப்பதற்காக வந்தார். அப்போஸ்தலனாகிய பேதுரு புறஜாதியனான கொர்நேலியுவுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் சுவிசேஷத்தைக் கொண்டு சென்றார். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து இரட்சிப்பைக் கண்டடைந்த முதல் புறஜாதி மக்கள் அவர்களே. (அப்போஸ்தலர்: 10:44-48). அப்போஸ்தலனாகிய பவுல் புறஜாதிகளுக்குச் சுவிசேஷத்தை எடுத்துச் செல்வதற்காக "புறஜாதிகளின் அப்போஸ்தலன்" என்று சிறப்பாக நியமிக்கப்பட்டார். (அப்போஸ்தலர்: 9:15; 22:21; கலாத்தியர்: 2:9).

"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும், அவர்கள் கைக் கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்..." (மத்தேயு: 28:19,20).