அக்டோபர் 24, 2023

Rev.M.Charles - 5ம் ஆண்டு நினைவு மடல் - உத்தம ஊழியனே!

 

Rev.M.Charles - 5ம் ஆண்டு நினைவு மடல் 
உத்தம ஊழியனே!


















































































மே 11, 2023

மாதாந்திர இதழ் - நேசரின் சத்தம் | மே 2023 | Monthly Magazine - Voice of Beloved

                                        Monthly Magazine - Voice of Beloved | May 2023


















ஏப்ரல் 14, 2023

Satisfaction in the Drought - வறட்சியில் திருப்தி

Satisfaction in the Drought - வறட்சியில் திருப்தி 


ஏசாயா:58:11 - "கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்."

ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையிலும் வறட்சியை அனுபவிக்கும் ஒரு காலம் வரும். தனிமையின் காலம்; போராட்டங்களை சந்திக்கும் காலம்; தோல்வியை சந்திக்கும் காலம்; இப்படிப்பட்ட பல காலங்கள்... சில நேரங்களில், நம்முடைய பொருளாதாரம், வியாபாரம் (அ) தொழில், உறவுகள், குடும்ப வாழ்க்கை, ஆவிக்குரிய வாழ்க்கை போன்ற காரியங்களில் வறட்சி காணப்படலாம்.

வறட்சி - வெறுமை, பஞ்சம், தாகம், செழிப்பை காண முடியாத இடம்

நாம் வறட்சியான சூழ்நிலையை சந்திக்கும்போது நமது மனநிலை மாறலாம். ஆண்டவரை விட்டு பின்வாங்க தூண்டப்படலாம். நமது வாயின் அறிக்கைகள் மாறலாம். வறட்சியின் மத்தியில் தேவன் எங்கே என்று முறையிடுவோமே தவிர இந்த வறட்சி எதனால் வந்தது என்பதை அறிய முயற்சி செய்ய தவறி விடுகிறோம். நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் வறட்சியான நிலை, வெறுமை எல்லாவற்றிற்கும் காரணம் 'நாம் மட்டுமே'! எங்கேயோ நாம் ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியத்தை செய்திருக்கலாம். ஆனால் நாம் அதை உணருவதில்லை. இருந்தாலும் நம் தேவன் நம்மை கைவிடுவதில்லை. அவர் நம்மை நித்தமும் நடத்தி மகா வறட்சியான காலங்களில் நம்மை திருப்தியடைய செய்யவே விரும்புகிறார்.

There is a time and a season for everything. So if the drought had a time and a season, then know that Abundance/Satisfaction got a time and a season too!

ஏன் வறட்சி?


1. ஆண்டவருக்கு கீழ்ப்படியாததினால் வரும் வறட்சி - 2இரா:6:24-30


- சமாரியாவை முற்றுக்கையிட்ட சீரியா தேசத்து படை
- கொடிய பஞ்சம், விலைஉயர்வு
- தன் குழந்தையையே சாப்பிட நினைக்கும் ஒரு தாய்

இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையை இஸ்ரவேல் ஜனங்கள் சந்தித்தனர். இதற்கு காரணம் அவர்களது கீழ்ப்படியாமை.

1இரா:11:31-35 - இஸ்ரவேல் தேசம் 2 பிரிவாக சாலொமோனின் நாட்களிலே பிரிக்கப்பட்டது.

வடக்கு இராஜ்யம் - சமாரியா
தெற்கு இராஜ்யம் - இஸ்ரவேல்

பிரிக்கப்பட்ட இராஜ்யத்தை கைப்பற்றுவது எளிது. ஆகவே அசீரியர்கள், பாபிலோனியர்கள் போன்ற சில நாடுகள் பிரிக்கப்பட்ட இராஜ்யத்தை கைப்பற்ற முயற்சி செய்தது. சீரியா தேசத்தின் ராஜா பெனாதாத் சமாரியாவை முற்றுகையிட முயற்சி செய்தான். (1இரா:20) அப்போத ஆகாப் இராஜா அந்நிய தெய்வங்களை சேவித்தான். ஆனால் பாகால் அல்ல; கர்த்தரே தெய்வம் என்பதை அறிந்தான். அந்த சூழ்நிலையில் சீரியர்கள் படை சூழ்ந்தது. ஆண்டவர் சீரியர்களை ஒப்புக்கொடுத்தார். ஆனால் ஆகாப் இராஜா ஆண்டவருக்கு மீண்டும் கீழ்ப்படியாமல், பெனாதாத் ராஜாவை தன் சகோதரன் என்று சொல்லி அவனோடே உடன்படிக்கை செய்து அவனை கொல்லாமல் உயிரோடே வைத்தான்.

1இரா:20:42 - அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

ஆண்டவர் பெனாதாத் அழிக்கப்பட வேண்டும் என்று எண்ணினார். ஆனால் இது இஸ்ரேல் இராணுவத்தின் கையால் நடக்க வேண்டும் என்றும் அவர் எண்ணினார். ஆனால் ஆகாப் ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்தார்.

மீண்டும் சீரியப்படை இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக வந்தது. ஆனால் எலிசா அவர்களை உபசரித்து அனுப்பிவிட்டார்.(2இரா:6:8,22,23)

மீண்டும் சீரியப்படை பெரிய திட்டத்துடன் வந்தது. நகரத்தைச் சுற்றி வளைத்து, அனைத்து வணிகம் மற்றும் வர்த்தகம் நகரத்திற்குள் நுழைவதைத் தடுக்கவும், இறுதியில் மக்களைப் பட்டினியால் சரணடையச் செய்யவும் தனது திட்டத்தை செயல்படுத்தினான், அது வெற்றிகரமாக இருந்தது. (2 இரா:6:24,25)

மிக பெரிய வறட்சி இஸ்ரவேல் தேசத்தில் ஏற்பட்டது. ஆகவே சாப்பிட ஏதுமில்லாததினால் தங்கள் பிள்ளைகளையே சாப்பிட துணிந்த மோசமான நிலை ஏற்பட்டது. இதை குறித்து தேவன் அவர்களுக்கு முன்னரே எச்சரித்துள்ளார். (உபா:28:52,53) தேவன் தந்த கட்டளைகளை பின்பற்றாமல், கீழ்ப்படியாமல் இருந்தால் சாபங்கள் வரும். சகலமும் குறைவுப்படும். வறட்சியே காணப்படும்.

ஆகாப் இராஜாவின் கீழ்ப்படியாமையும் இஸ்ரவேல் ஜனங்களின் கீழ்ப்படியாமையும்(விக்கிரக ஆராதனை) தேசத்திலே வறட்சியை கொண்டு வந்தது.

2. ஆண்டவருக்கு நம்மை அர்ப்பணிக்க வைக்கும் வறட்சி - 1 சாமு:1:2


- அன்னாளுக்கு குழந்தையில்லாததினால் அவளது வாழ்க்கை வறட்சியாக காணப்பட்டது. தன்னை வேதனைப்படுத்துகிற பெனின்னாளின் வார்த்தைகள்; எவ்வளவு தான் தன் கணவன் தன் மீது அன்பாக இருந்தாலும், தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்ற வருத்தம் அவளுக்கு இருந்தது. ஆண்டவர் அவள் கர்ப்பத்தை அடைத்து வைத்ததற்கு ஒரு நோக்கம் இருந்தது. ஆனால், வறட்சியின் சூழலில் இருக்கும்போது நமக்கு அந்த நோக்கம் தெரிவதில்லை.

1 சாமு:1:7 - "அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்."

அன்னாளுடைய வாழ்க்கையில் மனமடிவின் வார்த்தைகள், வெறுமை, தனிமை, வறட்சி இருந்தது. ஆனால் அதன் மத்தியிலும், அன்னாள் தேவ சமுகத்தில் தன்னை ஒப்புக்கொடுத்து மனங்கசந்து அழுது ஜெபித்தாள். (1சாமு:1:9-11) தனக்கு பிள்ளை தந்தால் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்பேன் என்று அர்ப்பணித்து ஜெபித்தாள். அவளுடைய ஜெபம் கேட்கப்பட்டது. பிள்ளை பிறந்தது. பொருத்தனையை நிறைவேற்றினாள். அன்னாளின் அர்ப்பணிப்புக்கு ஒரு வறட்சியை தேவன் அனுமதித்தார்.

லூக்:5: 3- 11 - பேதுருவும் அவன் சகோதரனும் இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் ஒரு மீனும் அகப்படவில்லை. அவர்களுடைய வலை வெறுமையாக இருந்தது. வறட்சி காணப்பட்டது. காரணம் அங்கே அர்ப்பணிப்பு தேவையாயிருந்தது. வறட்சியின் சூழலிலே இயேசு அவர்களை சந்திக்கிறார். தான் பிரசங்கம் பண்ணும்படி படகை தந்த பேதுருவின் வறட்சி நிறைந்த வாழ்விலே திருப்தியை காண செய்யும்படி, ஆழத்திலே வலையை போட சொல்கிறார். அற்புதம் நடந்தது. பேதுருவும் அவன் சகோதரனும் ஆண்டவருக்கு பின்செல்லும்படி தங்களை அர்ப்பணித்தனர். 

3. விசுவாசத்தின் அளவை சோதிக்கும்படி வரும் வறட்சி - எபி:11:11,12

 ஆபிரகாமும் சாராளும் வயது சென்றவர்களாக இருந்த போதிலும், தேவன் தந்த வாக்கின் மேல் விசுவாசமாக இருந்ததினாலே, அவர்களுக்கு இருந்த வறட்சியை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஏற்ற வேளையிலே தேவன் நிச்சயமாக ஒரு குழந்தையை தருவார் என்ற விசுவாசத்துடன் இருந்தனர்.(ஆதி:21:1,2)

தேவன் ஆபிரகாமுக்கு வாக்கு தந்தது போல, நாம் தரிசிக்கிற அனைத்தையும் நமக்கு தருகிறார். (1கொரி:2:9)

யோபு:1:21,22 - யோபுவின் விசுவாசத்தையும் உத்தமத்தையும் சோதிக்கும்படி அவன் வாழ்க்கையில் வறட்சி காணப்பட்டது. ஆஸ்தியை இழந்தான். பிள்ளைகளை இழந்தான். வியாதியினால் வேதனைப்பட்டான்.மனைவியின் தூஷணத்தினால் மனமுடைந்தான். எல்லாவற்றின் மத்தியிலும் யோபு தன் உத்தமத்தை விடவில்லை. உறுதியாக இருந்தான். இரட்டிப்பான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டான். (யோபு:42:10)

வறட்சியான சூழ்நிலையிலும் நம் தேவையறிந்து நம்மை அதிசயமாக நடத்தி, நம்மை பெலப்படுத்தி திருப்தியாக்குகிறவர் நம் தேவன்.


 வறட்சியில் திருப்தியை தருகிற தேவன்:

1. கீழ்ப்படிந்து நடக்கும்போது (லேவி:25:18,19)

- தேசத்திலே சுகமாய் குடியிருக்க செய்வார்

2. உத்தமமாய் நடக்கும்போது (சங்:37:18,19)

- பஞ்ச காலத்திலே திருப்தியடைய செய்வார்

3. ஆலயத்தில் வாசமாயிருக்கும்போது (சங்:65:4)

- ஆலயத்தின் நன்மையால் திருப்தியடைய செய்வார்

4. கர்த்தருடைய நாமத்தை துதிக்கும்போது (யோவேல்:2:26)

- சம்பூரண ஆசீர்வாதம் அளிப்பார். வெட்கப்பட்டு போவதில்லை

5. கர்த்தருக்கு பயப்படும்போது (நீதி:19:23)

- திருப்தியடைந்து நிலைத்திருக்க செய்வார்.

நாம் இந்த 5 காரியங்களில் சரியாக இருக்கும்போது, கர்த்தர் நம் வாழ்வில் நாம் சந்திக்கிற வநட்சியான சூழ்நிலையிலே நம்மை நேர்த்தியாக நடத்தி, திருப்தியாக்கி நம்மை பெலப்படுத்துவார். நம் வறண்டு போன வாழ்க்கை நீர்ப்பாய்ச்சல் உள்ள தோட்டத்தை போலவும் வற்றாத நீரூற்று போலவும் செழிப்பாக மாறும். (ஏசா:58:11)

சங்:107:35 - "அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,"

ஏசா:35:1 - "வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்."

தற்காலிக வறட்சியான சூழ்நிலை உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க அனுமதிக்கு கூடாது. வறட்சியான சூழ்நிலை வரும்; போகும். ஆனால், அது நிரந்தரமல்ல.

கர்த்தருடைய வார்த்தையை கேட்டு அவருக்கு அர்ப்பணித்து விசுவாசத்துடன் காத்திருக்கும்போது வறட்சி நீங்கி, சம்பூரண ஆசீர்வாதம் வரும். அப்போது வறண்ட நிலம் போல இருக்கும் நாம் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்போம்.

இந்த வறட்சியான சூழ்நிலையை, கசப்பான சூழ்நிலையாக இல்லாமல் மகிழ்ச்சியாக மாற்ற முயற்சி செய்யுங்கள். கசப்பான அனுபவம் தேவனை பற்றி தவறாக நினைக்க தூண்டும். விசுவாச வார்த்தையை பேசுங்கள். இனி வரப்போகும் அற்புதங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு உங்களை ஆயத்தப்படுத்துங்கள். நீங்கள் விசுவாச வார்த்தையை பேச ஆரம்பிக்கும் போது, வறட்சி நீங்கி போகும். கர்த்தர் செய்த நன்மைகளுக்காக அவரை துதியுங்கள். அவருடைய நாமத்தை உயர்த்துங்கள். அவரை அதிகமாக நேசியுங்கள். அவருடைய மகிமையை பிரஸ்தாபப்படுத்துங்கள். 

ஏப்ரல் 10, 2023

Transformation Prayer from Jonah's Prophetic Book - யோனாவின் தீர்க்கதரிசன புத்தகத்திலிருந்து மறுரூப ஜெபம்

 யோனாவின் தீர்க்கதரிசன புத்தகத்திலிருந்து மறுரூப ஜெபம்


யோனா:3:4-9 - யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்.அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள். இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு சாம்பலிலே உட்கார்ந்தான்.மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயில் எங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசி பாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும், மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள். யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான்.

 

இரட்டு - அர்ப்பணிப்பு, தாழ்மை குறிக்கும் / சாம்பல் - மனந்திரும்புதலை குறிக்கும்

 

நினிவேயின் ஜனங்கள் செய்தது:

1. தேவனை விசுவாசித்தார்கள் - மனந்திரும்புதலின் ஆரம்பம்

2. உபவாசம் செய்யும்படி கூறினார்கள் - ஒன்றும் ருசி பார்க்கவில்லை, தண்ணீர் குடிக்கவில்லை, மிருகங்களும் உபவாசம்

3. சத்தம் உயர்த்தி ஆண்டவரை கூப்பிட்டார்கள்

4.  பொல்லாத வழியை விட்டார்கள்

5. கைகளிலுள்ள கொடுமையை விட்டார்கள்

 

தேவனின் உக்கிரகோபம் அவர்கள் மேல் இருந்தது. 40 நாளில்  நியாயத்தீர்ப்பு வரப்போகிறது; தேசம் கவிழ்க்கப்படும் என்று கேட்டவுடன் இரட்டுடுத்தி உபவாசித்து ஆண்டவரை நோக்கி கூப்பிட்டு மனந்திரும்பினார்கள்.

1. மனந்திரும்புதலின் ஆரம்பம் - ஆண்டவரை விசுவாசிப்பது

Ø வாழ்க்கையை மாற்றும் வல்லமையை கேட்போம்!

நினிவேயின் மக்கள் பாவம் செய்து பொல்லாத வழியில் நடந்து கொண்டிருப்பவர்கள். ஆனால் தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டவுடனே தேவனை விசுவாசித்தார்கள் என்று வேதம் சொல்கிறது.  அவர்களுடைய விசுவாசம் தான் அவர்களுடைய மனந்திரும்பதலுக்கான முதல் படி.

தேவனையும் அவருடைய வார்த்தையையும் விசுவாசிக்கும் போது, அவரின் சித்தப்படி நமது வாழ்க்கையை மாற்றும் வல்லமையை நாம் பெற்றுக் கொள்வோம்.

மத்தேயு:9:2 - திமிர்வாதக்காரனின் பாவ வாழ்க்கையை மாற்றிய விசுவாசம்

அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

 

மத்தேயு:9:22 - பெரும்பாடுள்ள ஸ்திரீயின் பெலவீன வாழ்க்கையை மாற்றிய விசுவாசம்

இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.

 

மாற்கு:10:52 - குருடனின் இருளான வாழ்க்கையை மாற்றிய விசுவாசம்

இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.

 

யோவான்:11:25 - மரித்து/முடிந்து போன வாழ்க்கையை மாற்றிய விசுவாசம்

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

 

யோவான்:3:16 - தேவனின் அன்பு - நாம் அவரை விசுவாசித்தால் நித்திய ஜீவனை அடைவோம். அவருடைய குமாரனை விசுவாசிக்கிற நமக்கு நித்திய ஜீவன்/ முடிவில்லா:த வாழ்க்கை உண்டு.                                                                                                                                                                                                                   

யோவான்:8:36 - குமாரனை விசுவாசித்தால் போதும். அவர் நம்மை விடுதலையாக்கினால், நாம் விடுதலையாவோம்.

 

2. உபவாசம் செய்யும்படி கூறினார்கள்:

நினிவே மக்கள் தங்கள் மேலிருக்கும் தேவனின் கோபாக்கினை நீங்கும்படி, தேவன்

அவர்கள் மேல் மனஸ்தாபப்பட்டு விடுவிக்கும்படி, உபவாசம் செய்யும்படி கூறினார்கள். பெரியோர் முதல் சிறியோர் வரை இரட்டுடுத்தி கொண்டார்கள். ராஜாவும் இரட்டுடுத்தினான். மிருகங்களும் இரட்டுடுத்தினது. ஒன்றும் சாப்பிடாமல் தண்ணீர் குடியாமல் கர்த்தருடைய சமூகத்தில் அர்ப்பணித்தார்கள்.

Ø தேவனின் கோபாக்கினை நீங்கும்படி கேட்போம்!

நாகூம்:1:6 - “அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும்.

- தேவனுடைய கோபத்துக்கு முன் ஒருவராலேயும் நிற்கமுடியாது. நினிவேயை சர்வசங்காரம் செய்ய நினைத்தார் தேவன். (நாகூம்:1:9) சோதோம் கொமோராவை போல, நோவா நாட்களில் வந்த அழிவை போல ஒரு அழிவு நினிவே பட்டணத்துக்கு

வரும் என்று யோனாவை கொண்டு பேசினார். அவ்வளவு தவறுகளை, பாவங்களை செய்திருக்கிறார்கள்.

நாகூம்:2:13 - “இதோ நான் உனக்கு விரோதமாய் வந்து….”

கர்த்தர் நமக்கு விரோதமாய் வந்தால், அது மிகவும் மோசமான நிலை! சவுல் ராஜாவுக்கு கர்த்தரால் அனுப்பப்பட்ட பொல்லாத ஆவி; (1சாமு:16:14) நோவா நாட்களில் வந்த அழிவு; சோதோமின் அழிவு; கோராகின் புத்திரர் அழிவு. அவர் நம் பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாய் ஒருவராலும் நிற்க முடியாது. ஆகவே, அவருடைய கோபாக்கினை நம்மை விட்டு நீங்கும்படி ஜெபிப்போம்.

 

- நினிவேயின் ராஜா தேவ கோபாக்கினை நீங்கும்படி தனது ராஜமேன்மை, கிரீடம், ராஜ உடை எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு இரட்டுடுத்தி உபவாசித்தான்.

 

- நாகூம்:2 - தேவனது கோபாக்கினையின் போது, நமது நிலை

1. சிறையிருப்பு (நாகூம்: 2:7)

2. வெறுமை (நாகூம்:2:10)                      

3. தள்ளாடுதல் (நாகூம்:2:10)

4. வேதனை (நாகூம்:2:10)

5. பெலவீனம் - சிங்கங்களின் வாசஸ்தலம் (நாகூம்:2:11 - அடையாள சின்னம்)

இந்த நிலை மாற ஜெபிப்போம்!

 

3. சத்தம் உயர்த்தி ஆண்டவரை கூப்பிட்டார்கள்:

தாங்கள் செய்த பாவங்களினிமித்தம், மீறுதலினிமித்தம் தேவனுக்கு ஏற்பட்ட  கோபத்தை விட்டு தங்கள் மேல் மனஸ்தாபப்படும்படி தங்களது சத்தத்தை உயர்த்தி ஆண்டவரை கூப்பிட்டார்கள். எத்தனை நாள் இப்படி உபவாசத்தோடு உரத்த சத்தமாய் கூப்பிட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தேவன் மனமிரங்கும் வரை தங்கள் சத்தத்தை உயர்த்தி ஆண்டவர் சமூகத்தில் ஜெபித்தார்கள்.

Ø நம் விண்ணப்பம் நிறைவேற தேவனை சத்தம் உயர்த்தி கூப்பிடுவோம்!

எஸ்தர்:4:3 - ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள்.

- தேசத்தின் இரட்சிப்புக்காக எஸ்தரும், மொர்தேகாயும், மக்களும் இரட்டுடுத்தி உபவாசம் பண்ணி, தேவனை நோக்கி அழுகையோடும் புலம்பலோடும் துக்கத்தோடு வேண்டினார்கள்.

எஸ்தர்:9:30 - “யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான,

- அலறுதலோடு ஆசரித்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. மவுனமாயிருக்க வேண்டிய நேரம் இதுவல்ல என்று எஸ்தர் தெரிந்து கொண்டாள். தனக்கு கிடைத்த ராஜமேன்மை எல்லாவற்றையும் விட்டுவிட்டு இரட்டுடுத்தி தேவ சமூகத்திலே தன்னை தாழ்த்தி ஜெபித்தாள். அவளையும் அவள் ஜனத்தாரையும் எதிர்த்த ஆமான் இல்லாமற்போனான்.

4. பொல்லாத வழியை விட்டார்கள்:

நினிவே நகர மக்கள் கர்த்தருக்கு பிரியமில்லாத பல காரியங்களை செய்து வந்தார்கள். நாகூம்:3:1-4 - அது இரத்தபழிகளின் நகரம்; கொடுமை நிறைந்தது. பிணங்களின் மேல் இடறிவிழத்தக்க அவ்வளவுபேரை கொலை செய்திருக்கிறார்கள்.

வேசித்தனங்கள், சூனியம் போன்ற பல பாவ காரியங்கள் மக்களிடையே இருந்தது.

பலத்த சேனை, படைப்பலம் மிகுந்த நினிவே பட்டணம் இப்போது அழிக்கப்பட போகிறது என்று கேள்விப்பட்டதும், தங்கள் பொல்லாத வழியை விட்டு திரும்பும்படி ஒப்புக்கொடுத்தனர். மிகுந்த பலமுள்ளது நினிவே பட்டணம். எண்ணிறைந்த சேனையால் பெலனாக இருந்தது. ஆனால் சிறையிருப்பிலே கொண்டு போகப்பட்டு சங்கிலிகளால் கட்டப்பட்டது.

Ø பொல்லாத வழியை விட்டு விலகும்படி ஜெபிப்போம்!

சங்:119:101 - “உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.

- நமது கால்கள் பொல்லாத வழிகளை விட்டு விலகி நடக்கும்படி ஜெபிப்போம்.

 

எசேக்கியேல்:38:11 - “உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து,

மத்:15:19 - “எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச் சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்

- நமது இருதயத்தின் யோசனைகள் மற்றும் நினைவுகள் பரிசுத்தமானவைகளாய் இருக்க, பொல்லாத நினைவுகள் எழும்பாமலிருக்க ஜெபிப்போம்.

 

ஆபகூக்:2:9 - “தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ!

- பொல்லாத ஆதாயத்தை தேடி செல்வதை விட்டு விலகும்படி ஜெபிப்போம். அப்படி செல்வதினால் வரும் லாபத்தின் மேல் தான் கவனமிருக்குமே தவிர, ஆண்டவர் மேல் பற்றுதல் இருக்காது. ஆத்துமாவுக்கு விரோதமாய் நாம் பாவம் செய்கிறவர்களாயிருப்போம் என்று வசனம் சொல்கிறது. (ஆபகூக்:2:10)

 

எபிரேயர்:3:12 - “சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

- ஆண்டவரை விட்டு விலக செய்யும் பொல்லாத இருதயம் நம்மில் இராதபடிக்கு ஜெபிப்போம்.

 

5. கைகளிலுள்ள கொடுமையை விட்டார்கள்:

Ø கைகளின் கிரியை பரிசுத்தமாயிருக்க ஜெபிப்போம்!

எரேமியா:18:11 - இப்பொழுதும், நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருவப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி,

 

உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.

- நமது வழிகளையும் கிரியைகளையும் சீர்ப்படுத்தும்படி ஜெபிப்போம்.

 

மீகா:3:4 - “அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.

- பொல்லாத கிரியையை மன்னித்து நமது வேண்டுதலுக்கு தேவன் மறுஉத்தரவு கொடுக்கும்படி ஜெபிப்போம்.

 

1இரா:16:7 - “ பாஷா தன் கைகளின் செய்கையால் கர்த்தருக்குக் கோபமுண்டாக்கி, அவர் பார்வைக்குச் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும்

- நம் கைகளின் செய்கையினால் கர்த்தருக்கு கோபமுண்டாக்கின காரியங்களை மன்னிக்கும்படி ஜெபிப்போம்.

 

யோபு:31:7 - “என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்,

- இந்நாள் வரை நமது நடைகள், இருதயம், சிந்தனைகள், கண்கள், கைகள் ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியத்தை செய்திருக்குமானால் மன்னிப்பு கேட்டு, திரும்பவும் அதை செய்யாதபடி ஜெபிப்போம்.

 

பாவங்களை அறிக்கை செய்வோம். தெரிந்த பாவங்கள், அந்தரங்க பாவங்கள், மறைமுகமான பாவங்கள், மீறுதல்கள், பொல்லாத காரியங்கள் எதுவாக இருந்தாலும் அறிக்கை செய்து விட்டு விடுவோம். மறுரூபமடைவோம்!

 

2நாளா:7:14 - “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.